ஸ்பெயினில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்த தாய் உள்ளிட்ட 3 பேரை சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்பெயினில் தென்கிழக்கு துறைமுக நகரான அலிகாண்டேவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில், 15 வயது சிறுவன், பள்ளியில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். இதை கடந்த செவ்வாயன்று அவனது தாய் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது தாய் தந்தை, மற்றும் 10 வயது சகோதரனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தான்.
இதையடுத்து உறவினர்களிடம் சென்று யாரோ சுட்டுக்கொன்று விட்டார்கள் என்று சனிக்கிழமை கூறியிருக்கிறார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சிறுவன் மூன்று நாள்களாக இறந்தவர்களின் சடலங்களுடன் வீட்டில் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சிறுவனை கைது செய்து விசாரனை நடத்தியதில் சிறுவனே மூவரையும் சுட்டுக்கொன்றது தெரியவந்தது.